அடித்தளம்
'‘ராஜாராம் - வாழ்நாள் சாதனையாளர், தென்னிந்திய மருத்துவர் சங்கம்'-விருதையே உற்று பார்த்துக்கொண்டிருந்தான் முத்துகுமார்.
கடந்த சில வாரங்களாக ஸ்டேசனுக்கு கூட போகாமல், காலை 8 மணிக்கெல்லாம் புரொஃபசர் ராஜாராம் வீட்டில் அவருக்காக காத்திருப்பது அவனுக்கு பிடிக்கவில்லைதான். இருந்தாலும் அந்த கொலைகாரனை பிடிக்க தன்னிடமோ, தன் காவல் துறையிடமோ வேறு வழியில்லாமல் இந்த உளவியல் நிபுணரிடம் வந்திருப்பது புரிந்து , கோபத்தை வெளியே காட்டாமல் உள்ளுக்குள்ளே நொந்துகொண்டான்.
முப்பத்து மூன்று வயதே ஆன எஸ்.ஐ.முத்துக்குமார், கொஞ்சம் இறுக்கமாகத்தான் காட்சியளித்தான். காவல்துறைக்கே உரித்தான மீசை, கருத்ததேகம், வலிமையான உடற்கட்டு. இன்னும் தன்னால் அந்த சீரியல் கொலைகாரனை பிடிக்கமுடியாமல் போனது என அனைத்தும் ஒன்றுசேர்ந்து அவனை மேலும் கடினமாக்கியது. அவன் சிந்தனையின் மத்தியல், அறைக்குள் நுழைந்தார் புரொஃபசர் ராஜாராம்.
68 வயதில் புரொஃபசர் ராஜாராம், சார்ட்ஸ் டி-சர்ட் சகிதம் தோன்றுவது கூட அவன் இறுக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்.
"வாப்பா! வந்து ரொம்ப நேரம் ஆச்சோ?"
"இல்ல சார். இப்ப தான் வந்தேன். அப்புறம் அந்த கொலைகாரன பத்திய கேஸ் ஸ்டெடி ஃபைல்ஸ் இன்னிக்கு கொடுக்கிறதாசொன்னீங்க. அதான் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்", முத்துகுமார்.
"நேத்து ராத்திரியே முடிச்சுட்டேன். ஆனால்.."
முத்துகுமாரின் புருவங்கள் கேள்வி குறியாய் மாறின. "ஆனால்?"
"முதல்ல நீங்க, போலீஸ் காரங்க இந்த சீரியல் கில்லரை பிடிக்க என்னென்ன செஞ்சீங்கன்னு தெரியனும். காரணம், எனக்கு என் ஊகத்தில் சில சந்தேகங்கள் இருக்கு. அதை நான் உங்களுக்கு கொடுக்கும் முன்ன சரி செய்யனும். இல்லையா?"
"உங்களுக்கு தெளிவா சொல்லிடறேன் சார். ராம் நகரில் கடந்த பதினாலு மாசத்தில், தொடர்ந்து 5 கொலை. அத்தனையும் பெண்கள். அதுவும் சமீபத்தில் கல்யாணமான புது பெண்கள். கொலை செய்த முறை, அத்தனை பெண்களையுமே, அவர்களுடை 'பிரா'வை வைத்து, கழுத்தை நெரித்துக் கொலை."
புரொஃபசர், "யாரையெல்லாம் இன்வஸ்டிகேட் பண்ணுனீங்க?"
"கொலைகாரன் அதே தெருவில் வசிப்பவன் என்பது எங்களுக்கு முடிவாகிவிட்டது. காரணம், வெளி ஆட்கள் அந்த தெருவில் நுழைய முடியாது. செக்கியூரிட்டி சிஸ்டம் நல்லா இருக்கு. அதனால், எங்களுடயை முதல் சந்தேகம் அங்கிருக்கும் பேச்சுலர்ஸ். இரண்டு பேர்தான். ஒருவன் பேங்கில் வேலை. மற்றவன், மாருதி சோரூமில் சேல்ஸ் மேனேஜர். ரெண்டு பேரூம் அப்பா அம்மா கூட தங்கியிருக்காங்க. விசாரித்ததில், ரெண்டுபேருமே கிளீன். பின்ன, எல்லாரையும் ரெகுலர் இன்வஸ்டிகேசன் செய்தோம். குறிப்பிடும்படியா எந்த தகவலும் இல்லை"
"குட்! அந்த தெருவில் யாராவது நாற்பது வயதுக்கு மேற்பட்டவர், கொஞ்சம் குட்டையா, கண்ணாடி போட்டுட்டு குழந்தையில்லாம இருக்காரா?"
முத்துக்குமாரின் முகம் மாறியது, ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனாலும், அதை காட்டிக்கொள்ளாமல், "ஆமாம் சார். ஒரு லைப்ரரியன் இருக்கார்"
புரொஃபசர், "அவரை அரஸ்ட் பண்ணி, அவருடைய குழந்தை பருவத்தை பற்றி விசாரிங்க. குறிப்பா ஆறு வயசுவரை எதாவது வினோதமா நடந்ததானு பாருங்க. அப்படி எதாவது இருந்தால், கேஸ் ஓவர்"
சரியாக ஒரு வாரம் கழித்து டி.ஐ.ஜி அலுவலகத்தில் புரொஃபசர் ராஜாராமிற்கு சிறியளவில் ஒரு பாராட்டு விழா நடந்தது.
டி.ஐ.ஜி.சுசீந்தரன், "சொன்னா நம்பமாட்டீங்க புரொஃபசர். மூனுநாள் அவன டார்ச்சர் செய்தும், ஆளு கொஞ்சம் கூட வழிக்கு வரலை. கடைசியா உங்க ரிப்போர்ட்ட படிச்சு காட்டிய பிறகு, உடனே உண்மைய ஒத்துகிட்டான். ஆனால் உண்மைய சொல்லனும்னா, எங்களுக்கு இன்னுமே இந்த முடிச்சு அவுக்க தெரியல "
புரொஃபசர் ராஜாராம், "போலீஸ் காரங்க விட்டுவிட்ட ஒன்னே ஒன்னு, சஸ்பெக்ட்ஸோட குழந்தை பருவத்தை விசாரிக்காததுதான். என்னை போன்ற உளவியல் நிபுனர்கள் அதிகம் நம்புவது, அகோரமான கொலைகள் செய்யும் இதுபோன்ற சீரியல்கில்லர்கள் உருவாவதற்கான அடித்தளம் ஒரு குழந்தையின் ஆறு வயதிற்குள்ளேயே அமைந்து விடுகிறது. இந்த கொலைகாரன் தன் தாய் வேறொரு ஆணுடன் கொண்ட கள்ள உறவை பார்த்து வளர்ந்திருக்கிறான். அதனால் பெண்களை, குறிப்பாக கல்யாணம் ஆன பெண்களை வெறுத்தான். மேலும் குழந்தைகள் தங்களுடைய சிறுவயதில் பார்க்கும் கோரமான அனுபவங்கள்தான் பிற்காலத்....."
இந்த விழாவிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் முத்துகுமார், ஒரு மூலையில் அமர்ந்து, எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். முகம் மேலும் இறுகியிருந்தது. தான் சற்று முயன்றிருந்தால், இந்த விழா தனக்காக நடந்திருக்கும் என்று நினைத்து அங்கலாய்ப்படைந்திருந்தான்.
அன்று இரவு முத்துகுமார் வீட்டில்..
“ஏண்டி, புருசன் நான் கூப்பிடறேன். உனக்கு அப்படி என்ன அலுப்பு. இதே எவனாவது வெள்ளத்தோல்காரன் கூப்பிட்டிருந்தா போயிருப்ப. இல்ல?"
கவிதா, முத்துகுமரின் மனைவி, அவனது அறையின் விளைவாக கன்னத்தில் பதிந்த முத்துகுமாரின் கைரேகையை தடவிக்கொண்டே, "தயவு செய்து புரிஞ்சுக்கோங்க. என்னால இன்னிக்கு முடியாது. நான் பீரியட்ஸ்ல இருக்கேன்.ப்ளீஸ்....."
மீண்டும் அவள் கன்னதில் விழுந்த அறையை, கதவு இடுக்கில், அதிர்ந்த முகத்துடன் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் முத்துகுமாரின் ஐந்து வயது மகன்.
---முற்றும்---

No comments:
Post a Comment